மானிய விலையில் வேளாண் கருவிகள்: விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

மானிய விலையில் வேளாண் கருவிகளைப் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

மானிய விலையில் வேளாண் கருவிகளைப் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 
விவசாயத்தில் வேலை ஆட்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து, குறித்த காலத்தில் பண்ணைப் பயிர் சாகுபடி செய்ய ஏதுவாகவும், விவசாயிகளின் நிகர லாபத்தை உயர்த்தவும் வேளாண்மை இயந்திர மயமாக்கும் திட்டம் தமிழகத்தில் வேளாண்மை பொறியியல் துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 
இந்த திட்டத்தின்கீழ் நடப்பு நிதி ஆண்டில் ஈரோடு மாவட்டத்தில் தனிப்பட்ட விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் இயந்திரங்கள், கருவிகள் வழங்குதல், மானிய விலையில் வேளாண் இயந்திரங்கள், கருவிகள் வாடகைக்கு வழங்கும் மையங்கள் அமைத்தல் முதலான பணிகள் செயல்படுத்தப்பட உள்ளது.
அதன்படி விவசாயிகளுக்கு டிராக்டர், பவர்டில்லர், சுழற்கலப்பை, கொத்துக்கலப்பை, கரும்புகட்டை சீவும் கருவி, கரும்பு சோகை துகளாக்கும் கருவி, தென்னை ஓலை துகளாக்கும் கருவி முதலானவற்றுக்கு அவற்றின் மொத்த விலையில் 50 சதவீதம் அல்லது அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட அதிகபட்ச மானியத் தொகை இவற்றில் எது குறைவோ, அந்தத் தொகை மானியமாக சிறு, குறு, தாழ்த்தப்பட்ட பழங்குடியின, பெண் விவசாயிகளுக்கு வழங்கப்படும்.
இதர விவசாயிகளுக்கு அவற்றின் மொத்த விலையில் 40 சதவீதம் அல்லது அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட அதிகபட்ச மானியத் தொகை,  இவற்றில் எது குறைவோ அந்த தொகை மானியமாகவும் வழங்கப்பட உள்ளது.
விவசாயிகளுக்கு அதிக விலை உள்ள வேளாண் இந்திரங்கள் குறைந்த வாடகைக்கு கிடைக்கும் வகையில், முன்னோடி விவசாயிகள், விவசாய சுய உதவிக் குழுக்கள், தொழில் முனைவோருக்கு ரூ. 25 லட்சம் மதிப்புடைய வாடகை மையங்கள் அமைக்க 40 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ. 10 லட்சம் மானியமாக வழங்கப்படும்.
மொத்த மானியத் தொகையில் பொதுப் பிரிவினருக்கு ரூ. 5 லட்சமும், ஆதிதிராவிட பிரிவினருக்கு ரூ. 3 லட்சமும் பிடித்தம் செய்து தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் மானிய இருப்பு நிதிக் கணக்கில் ஒப்பந்த காலமான 4 ஆண்டுகள் இருப்பில் வைக்கப்படும். மீதித் தொகை பயனாளியின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும்.
4 ஆண்டுகளுக்குப் பின் பயனாளிக்கு வழங்கப்பட்ட வேளாண் இந்திரங்கள், கருவிகளை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் சரிபார்த்த பிறகு மானிய இருப்புத் தொகை திரும்ப வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு வேளாண் பொறியியல் துறை, ஈரோடு உபகோட்ட அலுவலக உதவி செயற்பொறியாளரை தொடர்பு கொள்ளலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com