ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்ற விசாரணையில் 2,106 வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ. 3 கோடி அளவுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வழக்கு, விபத்துக் காப்பீடு, சொத்துப் பிரச்னை, தொழில் வரி, காசோலை மோசடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளுக்குத் தீர்வு காணும் விதமாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் 21 குழுக்கள் அமைக்கப்பட்டு சனிக்கிழமை விசாரணை நடைபெற்றது.
ஈரோடு சம்பத்நகரில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்ற விசாரணைக்கு, மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி என்.உமாமகேஸ்வரி தலைமை வகித்தார். கூடுதல் மாவட்ட நீதிபதிகள் எம்.சாந்தி, கே.சுதா, பி.பார்த்தசாரதி, ஆர்.மாலதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். குற்றவியல் தலைமை நீதித்துறை நடுவர் கே.ஆர்.ஜோதி வரவேற்றார்.
இதில் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள 8,807 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இந்த வழக்குகளில் மொத்தம் 2,106 வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டு ரூ. 3 கோடியே 5 லட்சத்து 45 ஆயிரத்து 867 தொகை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டது.
இதில், சார்பு நீதிபதிகள், உரிமையியல் நீதிபதிகள், நீதித்துறை நடுவர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளர் எஸ்.லட்சுமி செய்திருந்தார்.