சத்தியமங்கலம் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தீர்த்தவாரி அபிஷேக மஹா யாகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
சத்தியமங்கலத்தை அடுத்த கொமாரபாளையத்தில் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயிலில் ஆர்ய வைஸ்ய சமூகத்தின் 20 ஆம் ஆண்டு குலதெய்வ விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவையொட்டி சனிக்கிழமை மங்கள இசையுடன் கணபதி பூஜை நடைபெற்றது. தொடர்ந்து இரண்டாம் கால பூஜை ஞாயிற்றுக்கிழமை துவங்கியது. பவானிஆற்றில் அங்காளபரமேஸ்வரி அம்மனுக்கு ஆறாட்டு விழாவும் தொடர்ந்து பவானி நதிக்கரையில் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன.
விழாவையொட்டி பவானிஆற்றில் இருந்து தீர்த்தக்குடம் எடுத்துவரப்பட்டு அங்குள்ள விநாயகர் கோயிலில் கோ பூஜை நடத்தப்பட்டது. இதில் பெண்கள் பங்கேற்று பசுவுக்கு பழங்கள் அளித்து வழிபட்டனர். கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவன், பார்வதி, அங்காளபரமேஸ்வரி மற்றும் 16 மகாலட்சுமி சிலைகள் முன் மஹாயாகம் நடைபெற்றது. யாகத்தில் பூஜிக்கப்பட்ட கலசம் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு அம்மனுக்கு புனித நீர் ஊற்றி அபிஷேகம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.