உயர்கல்வி பயிலும் பெண்களின் எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் அதிகரித்துள்ளது என பல்கலைக்கழக மானியக்குழு இணைச்செயலர் ஜி.சீனிவாசன் பேசினார்.
ஈரோடு வேளாளர் மகளிர் கல்லூரியின் பட்டமளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கல்லூரி செயலாளர் எஸ்.டி.சந்திரசேகர் தலைமை வகித்து விழாவைத் துவக்கி வைத்தார். கல்லூரி முதல்வர் என்.மரகதம் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக பல்கலைக்கழக மானியக்குழு இணைச்செயலர் ஜி.சீனிவாசன் பங்கேற்று மாணவியருக்குப் பட்டங்களை வழங்கிப் பேசியதாவது:
உயர்கல்வி பயிலும் பெண்களின் எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. எந்த ஒரு கல்வித் திட்டமானாலும் பெண்கள் இல்லாமல் இல்லை. பெண்களின் இடைநிற்றல் குறைந்து வருகிறது. பெண்கள் வேலைக்குச் செல்வது பயன் என்றாலும், அதைவிட அவர்கள் உயர்கல்வி பயில்வதன் மூலம் அவர்களது குடும்பத்தையும், குழந்தைகளையும் நல்ல நிலையில் வளர்க்க முடியும்.
அரசு துறை மட்டும் அல்ல தனியார் துறைகளிலும் பெண்கள் உயர் வேலை வாய்ப்பைப் பெற்று வருகின்றனர். சமூகத்தில் நிலவி வரும் வேகமான மாற்றத்தை அறிந்து மாணவியர் தங்களது தொழில்நுட்பத் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.
முன்னதாக 2015-2018ஆம் ஆண்டில் இளங்கலை பயின்ற 1,374 மாணவியர், 2016-2018ஆம் ஆண்டு முதுகலை பயின்ற 393 மாணவியர் என 1,767 மாணவியருக்கு அவர் சான்றிதழ்களை வழங்கினார். இதில் 32 பேருக்கு தங்கப்பதக்கமும், தர வரிசை பட்டியலில் இடம் பிடித்தவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில், பேராசிரியர்கள், மாணவியர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.