பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் திருவிழாவில் தீ மிதித்தபோது தவறி விழுந்து காயம்பட்ட பெண்ணுக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ. 62 ஆயிரம் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.
சத்தியமங்கலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பண்ணாரிஅம்மன் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் குண்டம் திருவிழா நடைபெறுவது வழக்கம். கடந்த மார்ச் 19 ஆம் தேதி நடைபெற்ற குண்டம் திருவிழாவில் கோயில் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த சரோஜா (60) என்ற பெண் தீ மிதித்தபோது குண்டத்தில் தவறி விழுந்ததில் கை, காலில் பலத்த தீக்காயம் ஏற்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்தார். ஆண்டுதோறும் நடைபெறும் குண்டம் திருவிழாவில் பக்தர்களின் நலன் கருதி கோயில் நிர்வாகம் சார்பில் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தில் இன்சூரன்ஸ் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், குண்டத்தில் தவறி விழுந்து காயம்பட்ட சரோஜாவுக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ. 62 ஆயிரத்து 155 க்கான உத்தரவை, பண்ணாரிஅம்மன் கோயில் துணை ஆணையர் (பொறுப்பு) சபர்மதி, யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் அதிகாரிகள், பரம்பரை அறங்காவலர்கள் முன்னிலையில் சரோஜாவுக்கு வழங்கப்பட்டது.
இதில், கோயில் மேலாளர் கபீர்தாஸ், பணியாளர்கள், யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் முகவர்கள் முத்துகுமார், மணி, கண்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.