சென்னிமலையில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சென்னிமலை நகரில் நிலவும் கடும் குடிநீர் பற்றாக்குறையைப் போக்க போர்க்கால நடவடிக்கை எடுக்கக் கோரி திமுகவினர் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.
சென்னிமலை பேரூராட்சிக்கு உள்பட்ட 15 வார்டுகளிலும் கடந்த இரண்டு மாதங்களாக கடும் குடிநீர் பஞ்சம் நிலவி வருகிறது. மேலும், 26 நாள்கள் ஆகியும் சென்னிமலை பகுதிகளில் பல இடங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. காவிரி ஆற்றில் தண்ணீர் அதிக அளவில் இருந்தும் சென்னிமலை பகுதிக்கு பற்றாக்குறை நிலவுவது சம்பந்தப்பட்ட ஊழியர்களின் மெத்தனப்போக்கை காட்டுகிறது எனக் கூறி, சென்னிமலை பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். தொடர்ந்து, சென்னிமலை - காங்கயம் சாலையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
போராட்டத்துக்கு, சென்னிமலை தெற்கு ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர் தமிழ்செல்வன், நகரச் செயலாளர் ராமசாமி ஆகியோர் தலைமை வகித்தனர்.
இதில், தி.மு.க., காங்கிரஸ் வட்டாரத் தலைவர் சிவகுமார் உள்பட தோழமைக் கட்சிகளின் நிர்வாகிகளும், சமூக நல அமைப்புகளும் கலந்துகொண்டனர். சம்பவ இடத்துக்கு வந்த சென்னிமலை போலீஸார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்னையை சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்று தீர்வு காணுவதாக கூறியதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.