தென்னிந்திய எஸ்.ஏ.ஈ. (சொசைட்டி ஆஃப் ஆட்டோமேட்டிவ் எஞ்ஜின்) அமைப்பு சார்பில், சத்தியமங்கலத்தில் உள்ள பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் எலக்ரிக் பைக் வடிவமைப்புப் போட்டி வெள்ளிக்கிழமை தொடங்கியது.
இக்கல்லூரியில் 3 நாள்கள் நடைபெறும் இப்போட்டியில், தமிழகம், கேரளம், கர்நாடகம், ஆந்திரம், தெலங்கானா, ஒடிஸா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள 67 கல்லூரிகளில் ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் படிக்கும் 540 மாணவர்கள் கலந்துகொண்டனர். 10 மாணவர்கள் கொண்ட ஒரு குழுவினர் என 54 குழுவினர் எலக்ட்ரிக் வாகனங்களின் உதிரிபாகங்களைப் பயன்படுத்தி வடிவமைப்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த வாகனங்களை முழுமையாக வடிவமைத்து இயக்கி காட்டியபின் எஸ்.ஏ.ஈ. அமைப்பைச் சேர்ந்த குழுவினர் சிறந்த முறையில் எலக்ட்ரிக் பைக் வடிவமைக்கும் குழுவினரைத் தேர்ந்தெடுத்து பரிசுகள் வழங்க உள்ளனர்.
வாகன வடிமைப்பில் ஈடுபட்டள்ள மாணவர்கள் கூறியதாவது:
சுற்றுச்சூழல் மாசுபாட்டைத் தவிர்க்கவும், பெட்ரோலியப் பொருள்களின் பயன்பாட்டைக் குறைக்கவும் எலக்ட்ரிக் வாகனங்களின் பங்கு அவசியம் என்பதால் இந்த வாகன வடிமைப்புப் போட்டியில் கலந்துகொண்டு வாகனத்தை வடிவமைத்து வருகிறோம். ரூ. 80 ஆயிரம் செலவில் நாங்கள் வடிவமைக்கும் பைக் ஒரு தடவை சார்ஜ் செய்தால் 80 கிலோமீட்டர் வரை செல்வதோடு அதிகபட்சமாக 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் வாகனத்தை இயக்கலாம். பெட்ரோல் வாகனங்களைவிட எலக்ட்ரிக் வாகனங்களின் விலை அதிகமாக உள்ளதற்கு காரணம் இதற்குத் தேவையான லித்தியம் அயன் பேட்டரி இங்கு தயாரிக்கப்படுவதில்லை. வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்வதால் அதன் விலை அதிகமாக உள்ளது. இந்தியாவில் தயாரித்தால் குறைந்த விலையில் எலக்ட்ரிக் வாகனங்களைத் தயாரிக்க முடியும் என்றனர்.