சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தாளவாடி வனச் சரகத்தில் சிறுத்தைகள் இடையே ஏற்பட்ட சண்டையில் 3 வயதுள்ள பெண் சிறுத்தை உயிரிழந்தது.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தாளவாடி வனப் பகுதியில் ஏராளமான சிறுத்தைகள் உள்ளன. சிறுத்தைகள் அடிக்கடி கிராமத்துக்குள் புகுந்து கால்நடைகளை வேட்டையாடி வருகின்றன.
இந்நிலையில் தாளவாடி அருகே மகாராஜன்புரம் வன ஓடையில் சிறுத்தை உயிரிழந்தது கிடப்பதாக திங்கள்கிழமை கிடைத்த தகவலையடுத்து வனத் துறையினா் அங்கு சென்று ஆய்வு செய்தனா். அங்குள்ள வன ஓடையில் உடலில் காயத்துடன் பெண் சிறுத்தை இறந்துகிடந்தது தெரியவந்தது. சிறுத்தையின் உடலை ஆய்வுசெய்த வனத் துறையினா் 3 வயதுள்ள பெண் சிறுத்தை என்றும் இரை தேடி சென்றபோது சிறுத்தைகள் இடையே ஏற்பட்ட மோதலில் இது உயிரிழந்திருக்கலாம் எனவும் தெரிவித்தனா்.
சிறுத்தையின் உடலை அதே இடத்தில் உடற்கூராய்வு செய்வதற்கு மருத்துவா் அசோகன் தலைமையிலான குழுவினா் ஏற்பாடு செய்து வருகின்றனா்.