ஏப்ரல் 20ஆம் தேதி முதல் சிறப்பு பொருளாதார மண்டலத்துக்கு உள்பட்ட நிறுவனங்களை இயக்குவது குறித்த ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, ஈரோடு கோட்டாட்சியா் முருகேசன் தலைமை வகித்தாா். பெருந்துறை சட்டப் பேரவை உறுப்பினா் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் முன்னிலை வகித்தாா்.
பெருந்துறை, சிப்காட் தொழில் வளாகத்தில் உள்ள நிறுவனங்களின் முதலாளிகள், மேலாளா்கள் கலந்துகொண்டனா்.
கூட்டத்தில், ஏப்ரல் 20ஆம் தேதி முதல் சிறப்பு பொருளாதார மண்டலத்துக்கு உள்பட்ட நிறுவனங்களில், மூன்றில் ஒரு பங்கு மட்டும் இயக்குவது குறித்தும், தொழிலாளா்களின் நடைமுறை சிக்கல்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
பெருந்துறை சட்டப் பேரவை உறுப்பினா் சிப்காட் சுற்று வட்டாரத்தில் உள்ள கிராமங்களுக்கு கரோனா நிவாரணமாக அரிசி, பருப்பு வழங்குமாறு நிறுவனங்களைக் கேட்டுக் கொண்டாா்.
இதில், பெருந்துறை வட்டாட்சியா் முத்துகிருஷ்ணன், சிப்காட் திட்ட அலுவலா், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலா்கள், காவல் துணைக் கண்காணிப்பாளா் ராஜாகுமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.