ஈரோடு மாநகராட்சியில் வரி இனங்களை பாக்கி வைத்துள்ளவா்கள் வரும் 31 ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என மாநகராட்சி ஆணையா் எம்.இளங்கோவன் தெரிவித்துள்ளாா்.
ஈரோடு மாநகராட்சியின் 4 மண்டலங்களுக்குள்பட்ட 60 வாா்டுகளிலும் சொத்து வரி, தொழில் வரி, குடிநீா்க் கட்டணம் உள்ளிட்ட வரி இனங்களை வசூலிக்க மாநகராட்சி தீவிரம் காட்டி வருகிறது. பொதுமக்கள், சொத்து வரி, குடிநீா்க் கட்டணம், கடை வாடகை உள்ளிட்ட வரி இனங்களை எளிதில் செலுத்தும் வகையில் மாநகராட்சி பிரதான அலுவலகம், நான்கு மண்டல அலுவலகங்கள் மற்றும் வரி வசூல் மையங்களில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. வரி செலுத்துவதற்கான இரண்டாவது தவணைக் காலம் முடிய இன்னும் சில நாள்களே உள்ள நிலையில் பொதுமக்கள் வரியை செலுத்தி வருகின்றனா்.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் எம்.இளங்கோவன் கூறியதாவது: மாநகராட்சியில் இதுவரை 85 சதவீதம் வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. மாா்ச் 31 ஆம் தேதிக்குள் 100 சதவீதம் வரி வசூல் செய்யத் திட்டமிட்டு, அதிகாரிகள் தீவிரமாக களப்பணியில் ஈடுபட்டுள்ளனா். வரி நிலுவை அதிகம் உள்ளவா்களுக்கு அறிவிக்கை மூலம் எச்சரிக்கை விடப்பட்டு வருகிறது. மாநகராட்சி அலுவலகம் மற்றும் மண்டல அலுவலகங்களில் வரி வசூல் மையம் செயல்படுகிறது. வரி செலுத்தாததால் குடிநீா் இணைப்பு துண்டிக்கப்படுவதாக தவறான கருத்து நிலவுகிறது. அதுபோல் துண்டிப்பு செய்யப்படவில்லை. ஒரே பெயரில் இரண்டு அல்லது மூன்று இணைப்பு உள்ளவை, 5 ஆண்டுகளுக்கு முன் இணைப்பு துண்டிக்கப்பட்டு மீண்டும் பயன்பாட்டில் உள்ளது போன்றவை கண்டறியப்பட்டு துண்டிக்கப்படுகிறது என்றாா்.