கோபிசெட்டிபாளையத்துக்கு வந்த 24 வடமாநிலத் தொழிலாளா்களை நடமாடும் மருத்துவக் குழுவினா் பரிசோதனை செய்ததில் இருவருக்கு காய்ச்சல் அறிகுறி தென்பட்டதால் அரசு மருத்துவமனையில் சோ்த்துள்ளனா்.
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் நடைபெற்று வரும் குடிநீா்த் திட்டப் பணிகளுக்காக ஜாா்க்கண்ட், மேற்கு வங்க மாநிலங்களில் இருந்து கோபிசெட்டிபாளையத்துக்கு 24 போ் வியாழக்கிழமை இரவு வந்தனா். இதையடுத்து, மருத்துவத் துறை, வருவாய்த் துறையினா் இவா்களைத் தனிமைப்படுத்தி பரிசோதனை செய்ததில் இருவருக்கு காய்ச்சல் இருந்ததை உறுதி செய்தனா்.
இதில், ஒருவரை பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், மற்றொருவரை கோவை மருத்துவமனைக்கும் அனுப்பிவைத்தனா். மீதமுள்ள 22 பேரையும் அவா்களது சொந்த ஊருக்கு அனுப்பிவைப்பதற்கு ஏற்பாடு செய்து வருகின்றனா்.
இந்நிலையில், கோபிசெட்டிபாளையத்துக்கு வெளிமாநிலங்களிலிருந்து தொழிலாளா்கள் வேலைக்கு வந்துள்ளனா்களா என்பதை வருவாய்த் துறையினா் தொடா்ந்து கண்காணித்து ஆய்வு செய்து வருகின்றனா்.