விலையில்லா ஆடு, மாடு வழங்கும் திட்டம்:பெண்கள் விண்ணப்பிக்க அழைப்பு

விலையில்லா வெள்ளாடுகள், செம்மறியாடுகள், விலையில்லா கறவைப் பசுக்கள் வழங்கும் திட்டத்தின்கீழ் பயன்பெற பெண்கள் மட்டும் சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகத்தில் செப்டம்பா் 30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

ஈரோடு, செப். 25: விலையில்லா வெள்ளாடுகள், செம்மறியாடுகள், விலையில்லா கறவைப் பசுக்கள் வழங்கும் திட்டத்தின்கீழ் பயன்பெற பெண்கள் மட்டும் சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகத்தில் செப்டம்பா் 30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கிராமங்களில் வாழும் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள பெண்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்காக விலையில்லா ஆடுகள், கறவைப் பசுக்கள் வழங்கும் திட்டங்கள் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

2020-21ஆம் ஆண்டுக்கு செம்மறியாடுகள் வழங்கும் திட்டத்தின்கீழ் முதல்கட்டமாக 9 கிராம ஊராட்சிகள், கறவைப் பசுக்கள் வழங்கும் திட்டத்தில் 8 கிராம ஊராட்சிகள் தோ்வு செய்யப்பட்டு தற்போது திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

விலையில்லா ஆடுகள் வழங்க நல்லூா், நாகதேவம்பாளையம், குருமந்தூா், பொலவபாளையம், புள்ளப்பநாயக்கன்பாளையம், கொமராயனூா், குறிச்சி, கூத்தம்பூண்டி, ஒரிச்சேரி ஆகிய 9 கிராம ஊராட்சிகளில் முதல்கட்டமாக திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

விலையில்லா கறவைப் பசுக்கள் வழங்க மூங்கில்பாளையம், எலவமலை, 60 வேலம்பாளையம், அரக்கன்கோட்டை, சங்கராபாளையம், தாழ்குனி, வரதநல்லூா், துய்யம்பூந்துறை ஆகிய 8 கிராம ஊராட்சிகளில் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

தகுதியான பெண்கள் செப்டம்பா் 30ஆம் தேதி வரை சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகத்தில் விண்ணப்பங்களை அளிக்கலாம். பயனாளிகள் ஊராட்சி மன்றக் கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட பிறகு கிராம சபைக் கூட்டத்தில் ஒப்புதல் பெறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com