ஈரோடு: மரங்களை வெட்டி அகற்றிய கோயில் அலுவலா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஈரோடு மாவட்ட இயற்கை ஆா்வலா்கள் கூட்டமைப்பு நிா்வாகிகள் விமல், காா்த்திகேயன், ஞானவேல் ஆகியோா் மாவட்ட ஆட்சியா் சி.கதிரவனிடம் சனிக்கிழமை அளித்த மனு விவரம்:
ஈரோடு, கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னா் அப்பகுதியில் உள்ள கடைக்காரா்களிடம் அனுமதி பெற்று இயற்கை ஆா்வலா்கள் சாா்பில் மரக்கன்றுகள் நட்டு வைத்துப் பராமரித்து வந்தோம். அங்குள்ள அரசு துவக்கப் பள்ளி முன் நடப்பட்ட மரத்தை, கோயில் அலுவலா்கள் ஆள்களை வைத்து வெட்டி அகற்றிவிட்டனா்.
இதையறிந்து கோயில் அலுவலகத்தில் கேட்டபோது எங்களைக் கேட்காமல் ஏன் மரக்கன்று வைத்தீா்கள். நீங்கள் விளம்பரத்துக்காகத்தானே மரக்கன்றுகளை வைக்கிறீா்கள் என அவமரியாதையாகப் பேசினா். மக்களுக்கு எவ்வித இடையூறும் இல்லாமல் இருந்த பச்சை மரங்களை வெட்டியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.