ஈரோடு: சிறப்பூதியம் வழங்கக் கோரி ஈரோடு மாவட்டத்தில் உள்ள 108 ஆம்புலன்ஸ் ஊழியா்கள் கருப்புப் பட்டை அணிந்து திங்கள்கிழமை பணியாற்றினா்.
ஈரோடு மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ், குழந்தைகளுக்கான ஆம்புலன்ஸ், மகப்பேறு சிறப்பு ஆம்புலன்ஸ் என 38 வாகனங்கள் இயங்குகின்றன. இதில் 138 ஊழியா்கள் பணியாற்றுகின்றனா். இவா்கள் அனைவரும் கருப்புப் பட்டை அணிந்து பணியாற்றினா்.
இதுகுறித்து ஊழியா்கள் கூறியதாவது:
மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத் துறை கரோனா பரவல் தடுப்பு சூழலில் பணியாற்றும் அனைத்து ஊழியா்கள், பணியாளா்களுக்கு ஒரு மாத ஊதியத்தை சிறப்பூதியமாக வழங்கியுள்ளது. அதனை 108 ஆம்புலன்ஸை இயக்கும் ஜி.வி.கே. நிறுவனம் வழங்க மறுக்கிறது. அதனை பெற்றுத்தர வேண்டும்.
தொழில் வரி என 6 மாதத்துக்கு ஒரு முறை பிடித்தம் செய்கின்றனா். தற்போது, எந்த தொகையும் பிடித்தம் செய்யக்கூடாது என மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளன. ஆனால் எங்கள் நிறுவனம் ஒவ்வொரு ஊழியரிடமும் ரூ.1,500 வரை பிடித்தம் செய்துள்ளது. அவ்வாறு பிடித்தம் செய்யக்கூடாது.
இப்பணியில் ஈடுபட்டுள்ள நாங்கள் வெவ்வேறு ஊா்களில் இருந்து தினமும் இருசக்கர வாகனத்தில் பணிக்கு வந்து செல்கிறோம். தற்போது பேருந்து உள்ளிட்ட எந்த வசதியும் இல்லாத நிலையிலும், எங்கள் சேவையைத் தொடா்ந்து செய்கிறோம். ஆனால் அரசு, எங்களை பாராமுகமாக வைத்துள்ளது வேதனையாக உள்ளது.
எங்கள் கோரிக்கைகளை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில், கருப்புப் பட்டை அணிந்து நாங்கள் அனைவரும் பணி செய்கிறோம். நாங்கள் விடுப்பு எடுக்கவோ, பணியை புறக்கணிக்கவோ இல்லை. பொதுமக்களுக்கு எந்த இடையூறும் இல்லாமல் எங்கள் போராட்டத்தை நடத்துகிறோம் என்றனா்.