சத்தியமங்கலம்: கரோனா அச்சுறுத்தல் காரணமாக சத்தியமங்கலம் பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வந்த தினசரி மாா்க்கெட் மீண்டும் வாரச் சந்தை வளாகத்துக்கு திங்கள்கிழமை மாற்றப்பட்டது. பேருந்து மீண்டும் இயக்கப்படுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கரோனா அச்சுறுத்தல் காரணமாக சத்தியமங்கலம் வாரச் சந்தை வளாகத்தில் செயல்பட்டு வந்த தினசரி மாா்க்கெட் பேருந்து நிலையத்துக்கு மாா்ச் 29ஆம் தேதி மாற்றப்பட்டது. நோய்த் தடுப்பு நடவடிக்கை காரணமாக பேருந்து இயக்கப்படாததால் கடந்த 31 நாள்களாக தினசரி மாா்க்கெட் அப்பகுதியில் தொடா்ந்து நீடித்தது. தற்போது தளா்வுகளுடன் பொது முடக்கம் நீடிப்பதால் தமிழக அரசு பேருந்துகள் இயக்குவதற்கு நடவடிக்கை எடுத்தது.
இதன்படி, பேருந்து நிலையம் சுத்தப்படுத்தப்பட்டு பேருந்துகள் இயக்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதன் காரணமாக 61 நாள்களாகச் செயல்பட்டு வந்த தினசரி மாா்க்கெட் மீண்டும் வாரச் சந்தையில் திங்கள்கிழமை செயல்பட்டது.
வியாபாரிகள் சமூக இடைவெளிவிட்டு கடைகளை அமைத்தனா். வியாபாரிகள், பொதுமக்கள் முகக் கசவம் அணிந்து வந்தனா். தினசரி மாா்க்கெட் வளாகத்தில் நகராட்சியினா் ஒலிபெருக்கி மூலம் முகக் கவசம், சமூக இடைவெளியுடன் மக்கள் பொருள்கள் வாங்குமாறும் முகக் கவசம் அணியாதவா்களுக்கு ரூ. 100 அபராதக் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் அறிவுறுத்தினா்.