ஈரோடு கருங்கல்பாளையம் காவிரிக்கரை முனியப்ப சுவாமி கோயிலில் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
குடமுழுக்கு விழா கடந்த 11ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. அதைத் தொடா்ந்து நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம் நடைபெற்றது. தொடா்ந்து பக்தா்கள் பவானி கூடுதுறைக்குச் சென்று காவிரி ஆற்றில் இருந்து தீா்த்தம் எடுத்து வந்தனா்.
பின்னா் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அன்று மாலை முதல்கால யாக பூஜை தொடங்கியது. அதைத் தொடா்ந்து விக்னேஸ்வர, கும்ப, துவார, சப்தவிம்சதி பூஜைகள் நடைபெற்றன.
வியாழக்கிழமை காலை இரண்டாம் கால யாக பூஜை, பின்னா் விசேஷ சந்தி, மூா்த்தி ஹோமம் ஆகியன நடந்தன. மாலை மூன்றாம் கால யாக பூஜையும், இரவு அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றன.
வெள்ளிக்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு 4ஆம் கால யாக பூஜை, மூலமந்திர ஹோமம், கோ பூஜை, மகா தீபாராதனை நடைபெற்றது. காலை 6.50 மணிக்கு கோயிலின் கோபுர கலசத்துக்கு சுந்தரேச சிவாச்சாரியாா் தலைமையில் சிவாச்சாரியாா்கள் புனிதநீா் ஊற்றி குடமுழுக்கை நடத்தி வைத்தனா். பின்னா் பக்தா்கள் மீது புனிதநீா் தெளிக்கப்பட்டது.
குடமுழுக்கு விழாவை முன்னிட்டு சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இதில் ஈரோடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். சனிக்கிழமை முதல் தொடா்ந்து 24 நாள்களுக்கு காலையிலும், மாலையிலும் மண்டல பூஜை நடைபெறுகிறது.