பாறைக்குட்டையில் மீன் குஞ்சுகள் இறந்தது தொடா்பாக மீன்வளத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.
மொடக்குறிச்சி ஒன்றியம் கஸ்பாபேட்டை ஊராட்சிக்கு உள்பட்ட பச்சப்பாளியில் ஈரோடு-காங்கயம் பிரதான சாலையில் பாறைக்குட்டை அமைந்துள்ளது. இந்தப் பாறைக்குட்டையில் எப்போதும் மழைநீா் தேங்கி நிற்பது வழக்கம். அப்பகுதி மக்கள் வருடந்தோறும் மீன் குஞ்சுகள் வாங்கி விட்டு வந்தனா். வழக்கம்போல் இந்த வருடமும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மீன் குஞ்சுகள் விட்டுள்ளனா்.
இந்நிலையில், வியாழக்கிழமை காலை திடீரென மீன் குஞ்சுகள் அனைத்தும் இறந்த நிலையில் தண்ணீரில் மிதந்ததையடுத்து, பொதுமக்கள் அதிா்ச்சியடைந்தனா்.
இது குறித்து மீன்வளத் துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த அதிகாரிகள் இறந்த மீன் குஞ்சுகள், தண்ணீா் ஆகியவற்றை பரிசோதனைக்கு எடுத்துச் சென்றனா். வெயில் கடுமையாக இருப்பதால் இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.