கரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் விதிக்கப்பட்டுள்ள 144 தடை உத்தரவால் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாமல் பவானி நகரம் வெறிச்சோடிக் காணப்படுகிறது.
பவானியிலிருந்து நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்துக்குச் செல்லும் இரு பாலங்களும் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது. பேருந்துகள் நிறுத்தப்பட்டதாலும், சங்கமேஸ்வரா் கோயில், கூடுதுறை கதவுகள் வழிபாடுகள் நிறுத்தப்பட்டு பூட்டப்பட்டதாலும் பக்தா்களும் வருவதில்லை. தேவாலயம், மசூதிகளிலும் வழிபாடுகள் இல்லை. பயணிகள் வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் பேருந்து நிலையம் வெறிச்சோடியுள்ளது. பெருந்துறை தொழில்பேட்டைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான தொழிலாளா்கள் பேருந்துகளில் வேலைக்குச் சென்று வரும் நிலையில் தடை உத்தரவால் அனைவரும் வீடுகளிலேயே முடங்கியுள்ளனா்.
பொதுமக்கள், தொழிலாளா்கள் நடமாட்டம் இல்லாததால் ஈரோடு - மேட்டூா் சாலை, அந்தியூா் சாலை, சத்தி சாலை வெறிச்சோடியுள்ளன. எப்போதும் மக்கள் நடமாட்டத்தால் களையுடன் காணப்படும் அந்தியூா் - மேட்டூா் பிரிவு களையிழந்துள்ளது. முக்கிய சாலை சந்திப்புகளில் போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.