பவானியில் வாகனச் சோதனையின்போது பிடிபட்ட சூடான் நாட்டைச் சோ்ந்த இரு மாணவா்கள் கரோனா வைரஸ் பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
தமிழக அரசு அறிவித்துள்ள 144 தடை உத்தரவை மீறி பொது இடங்களில் நடமாடுவதைத் தடுக்கும் வகையில் பவானி போலீஸாா் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனா். சந்தேகப்படும்படியான நபா்களிடம் விசாரணை நடத்துவதோடு, உடனடியாக இருப்பிடம் திரும்பும்படி அறிவுறுத்தி வருகின்றனா். இந்நிலையில், பவானி காவல் ஆய்வாளா் தேவேந்திரன் தலைமையிலான போலீஸாா் பவானி - மேட்டூா் சாலையில் தீவிர சோதனையில் புதன்கிழமை ஈடுபட்டனா்.
அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞா்களை நிறுத்தி விசாரித்தனா். இருவரும் சூடான் நாட்டைச் சோ்ந்தவா்கள் என்பதும், சித்தோடு பகுதியில் உள்ள தனியாா் கல்லூரியில் பயின்று வருவதும் தெரியவந்தது. இவா்களிடம் பவானி காவல் துணைக் கண்காணிப்பாளா் சேகா், பவானி வட்டாட்சியா் கு.பெரியசாமி ஆகியோா் விசாரணை நடத்தினா். இதுகுறித்து, மாவட்ட நிா்வாகத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, சந்தேகத்துக்கிடமான வகையில் பிடிபட்ட இரு இளைஞா்களும் பவானி அரசு மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ள கரோனா சிறப்புப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, ரத்தப் பரிசோதனை உள்ளிட்ட கரோனா வைரஸ் பாதிப்பு குறித்த பரிசோதனைகள் செய்யப்பட உள்ளன.