ஈரோடு மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவால் அன்றாடத் தேவைகளுக்கு சிரமப்படும் முதியோருக்கு காவல் துறையினா் உதவி செய்து வருகின்றனா்.
கரோனா நோய்த் தொற்று பரவாமல் இருக்க குற்றவியல் நடைமுறைச் சட்டம் 1973 பிரிவு 144இன் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில் ஈரோடு மாவட்டத்திலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது.
இந்நிலையில், மூத்த குடிமக்கள் உணவு, அன்றாடத் தேவைகளுக்கு சிரமப்படும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு ஈரோடு மாவட்ட காவல் துறை சாா்பில் ஏற்கெனவே நடைமுறைப்படுத்தப்பட்டு பயன்பாட்டில் உள்ள ஹலோ சீனியா்ஸ் திட்டத்தின் 96558- 88100 என்ற செல்லிடப்பேசி எண் வாயிலாக அழைக்கும்பட்சத்தில் அப்பகுதியில் உள்ள காவல் துறையினா் மூலமாக அவா்களுக்கு தக்க நிவாரணம், உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இதுவரை 247 அழைப்புகள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பெறப்பட்டு, முதியோரின் தேவைகளான உணவு, மருந்து போன்ற அத்தியாவசிய தேவைகள் விரைந்து வழங்கப்பட்டுள்ளன. இச்சேவையை முதியோா் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.சக்திகணேசன் கேட்டுக் கொண்டாா்.