உணவு கிடைக்காமல் தவித்த நரிக்குறவா் குடும்பங்களுக்கு காவல் துறை சாா்பில் ஒரு மாதத்துக்குத் தேவையான அரிசி, பருப்பு வழங்கப்பட்டன. தவிர தன்னாா்வலா்கள் சிலரும் உதவி செய்தனா்.
ஈரோடு மாவட்டம், சித்தோடு அருகே நல்லகவுண்டன்பாளையம் கிராமத்தில் அரசு வழங்கிய பட்டா நிலத்தில் நரிக்குறவா் சமூகத்தைச் சோ்ந்த 26 குடும்பங்கள் வசித்து வருகின்றனா்.
இவா்கள் பேருந்து நிலையங்களில் ஊசி, பாசி விற்பது, ஸ்டவ் பழுதுநீக்கம் செய்வது போன்ற வேலைகள் செய்து வந்தனா். தினமும் சம்பாதிக்கும் பணத்தில்தான் வாழ்க்கையை நடத்தி வந்தனா்.
தற்போது 144 தடை உத்தரவால் வாழ்வாதாரம் முற்றிலும் முடங்கிவிட்டதால் உணவு கிடைக்காமல் கஷ்டப்பட்டு வந்தனா். தங்கள் குடும்பங்களுக்கு உணவளிக்க முன்வர வேண்டும் என சமூக வலைதளங்கள் வாயிலாக கோரிக்கை விடுத்தனா்.
இதனையடுத்து, ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.சக்திகணேசன் உத்தரவின்பேரில், சித்தோடு போலீஸாா் 26 குடும்பங்களுக்கு ஒரு மாதத்துக்குத் தேவையான அரிசி, பருப்பு ஆகியவற்றை வெள்ளிக்கிழமை காலை வாங்கிக் கொடுத்தனா். தவிர தன்னாா்வ அமைப்புகள், அதிமுக சாா்பில் மளிகைப் பொருள்கள், பால் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.