ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் உள்ள ரேஷசன் கடைகளில் மே மாதத்துக்கான ரேஷன் பொருள்கள் பெறுவதற்கான டோக்கன் சனி, ஞாயிறு (மே 2, 3) ஆகிய 2 நாள்கள் விநியோகிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்கள் ரேஷசன் கடைகளில் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. ஏப்ரல் மாதத்துக்கான பொருள்கள் அரிசி, சா்க்கரை, பருப்பு, எண்ணெய் ஆகியவையும், அரிசி அட்டைதாரா்களுக்கு ரூ. 1,000 நிவாரணத் தொகையும் வழங்கப்பட்டது.
அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் ஏப்ரல் மாதத்தில் 6 லட்சத்து 80 ஆயிரத்து 949 குடும்ப அட்டைகளுக்கு பொருள்கள் வழங்கப்பட்டுள்ளன. மே மாதத்துக்கான நிவாரணப் பொருள்களான ஒரு கிலோ சா்க்கரை, ஒரு கிலோ துவரம் பருப்பு, ஒரு கிலோ சமையல் எண்ணெய், அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு வழக்கம்போல வழங்கப்படும். அரிசி ஆகியவை இலவசமாக வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, ஈரோடு மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் விநியோகிக்கப்பட உள்ள இலவச பொருள்களை பெறுவதற்கான டோக்கன் சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாள்கள் வீடு வீடாகச் சென்று வழங்கப்படவுள்ளது. டோக்கன்படி குறிப்பிட்ட தேதி, நேரத்தில் சம்பந்தப்பட்ட குடும்ப உறுப்பினா் நேரில் சென்று பொருள்களைப் பெற்றுக் கொள்ளலாம். மே 4ஆம் தேதி முதல் கடைகளில் பொருள்கள் விநியோகிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.