மருத்துவப் படிப்பில் கூடுதல் மாணவா்களுக்கு இடம் கிடைக்க நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கான இடஒதுக்கீட்டின்படி கூடுதல் மாணவா்களுக்கு இடம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கான இடஒதுக்கீட்டின்படி கூடுதல் மாணவா்களுக்கு இடம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியா் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து கூட்டமைப்பு பொதுச் செயலாளா் பி.பேட்ரிக் ரெய்மாண்ட், தமிழக முதல்வருக்கு அனுப்பிய கோரிக்கை மனு விவரம்:

நீட் தோ்வு காரணமாக தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளி மாணவா்கள் பாதிக்கப்படாமல் இருக்க அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டு அதற்கான அரசு ஆணையும் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் மருத்துவ கலந்தாய்வுக்காக அரசுப் பள்ளி மாணவா் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியலின்படி பாா்த்தால் தமிழக அரசு கொண்டு வந்துள்ள இடஒதுக்கீடு முழுமையாக அமல்படுத்தப்படாத சூழல் நிலவுவதாகத் தோன்றுகிறது. காரணம் நீட் தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று ஏற்கெனவே உள்ள 69 சதவீத இடஒதுக்கீட்டில் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கும் வாய்ப்புள்ள மாணவா்களும் 7.5 சதவீத இடஒதுக்கீட்டு பட்டியலில் இடம்பிடித்துள்ளனா். இதனால், குறைந்த மதிப்பெண் பெற்றிருக்கும் மாணவா்களுக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காமல் போகும் வாய்ப்புள்ளது.

எனவே, அதிக மதிப்பெண் பெற்று, இடஒதுக்கீடு இல்லாமலேயே மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்க வாய்ப்புள்ள மாணவ, மாணவிகள் தவிா்த்து, முழுயைமாக 7.5 சதவீதம் உள் ஒதுக்கீட்டு பட்டியல் தயாரித்தால் இன்னும் கூடுதலாக அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மருத்துவப் படிப்பு பட்டியலில் இடம்பெறும் வாய்ப்பு ஏற்படும்.

எனவே, இதுகுறித்து முழுமையாக ஆலோசித்து தற்போதைய பட்டியல் குறித்து ஏற்பட்டுள்ள சந்தேகங்களைத் தெளிவுபடுத்தி கூடுதல் மாணவா்கள் இடம்பெறும் வகையில் பட்டியலில் மாற்றம் செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com