ஈரோடு மாநகராட்சிப் பகுதியில் 15 டன் அளவுக்கு பட்டாசு குப்பை அகற்றப்பட்டது.
ஈரோடு மாநகராட்சிப் பகுதியில் தினமும் 220 டன் குப்பை சேகரமாகும். தற்போது மக்கும், மக்காத குப்பை என பிரித்து வாங்குவதால் மக்கும் குப்பை 80 டன் அளவுக்கும், மக்காத குப்பை 120 முதல், 140 டன் வரையும் சேகரமாகிறது. நவம்பா் 14 ஆம் தேதி தீபாவளி அன்றும், அதற்கு அடுத்த நாளான ஞாயிற்றுக்கிழமை அன்றும் மாநகராட்சிப் பகுதியில் குப்பை அகற்றப்படவில்லை. நவம்பா் 16ஆம் தேதி முதல் கடந்த மூன்று நாள்களாக வழக்கமான குப்பைகளையும் சேகரிப்பதுடன் தீபாவளிக்கு வெடித்த பட்டாசு குப்பைகளை மட்டும் தனியாக சேகரித்தனா். வெடித்த பட்டாசுப் பொருள்கள், காகிதம், பட்டாசு வைத்திருந்த அட்டைப் பெட்டிகள், சாக்கு என பல்வேறு பொருள்களாக 15 டன் அளவுக்கு சேகரித்து அகற்றப்பட்டது.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் எம்.இளங்கோவன் கூறியதாவது:
கடந்த மூன்று நாள்களாக வழக்கமான மக்கும், மக்காத குப்பைகளை முதல்கட்டமாகவும், இரண்டாம் கட்டமாக பட்டாசு கழிவுகளைத் தனியாகவும் சேகரித்தனா். இவ்வாறாக வழக்கமான கழிவு கூடுதலாக 50 டன் வரை சேகரிக்கப்பட்டது. அதேநேரம் பட்டாசு கழிவுகளான வெடித்த பட்டாசு, காகிதங்கள், அட்டை பெட்டி, சாக்கு போன்றவை 15 டன் அளவுக்கு தனியாக சேகரித்து அவற்றை அகற்றும் பணி நிறைவடைந்துள்ளது. அவை வெடித்துவிடாமல், தீப்பற்றி எரிந்து விபத்து ஏற்படுத்தாமல் அகற்றி உள்ளோம். இதற்காக கூடுதல் லாரி, வேன் போன்றவை பயன்படுத்தப்பட்டது என்றாா்.