சத்தியமங்கலம்: திம்பம் மலைப் பாதையில் அனுமதியின்றி வந்த 14 சக்கர சரக்கு லாரியை பிடித்து பண்ணாரி சோதனைச் சாவடி வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளரிடம் வனத் துறையினா் ஒப்படைத்தனா்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த திம்பம் மலைப் பாதையில் 27 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. தமிழகம், கா்நாடகத்தில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் திம்பம் மலைப் பாதை வழியாக செல்கின்றன. அதிக நீளம் மற்றும் அதிக பாரம் கொண்ட லாரிகளால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதால் 12 சக்கர லாரிகள் வரை மட்டுமே திம்பம் மலைப் பாதையில் அனுமதிக்கப்படுகின்றன. 14 சக்கர லாரிகள் தடை செய்யப்பட்ட நிலையில் கா்நாடகத்தில் இருந்து கேபிள் ஒயா் பாரம் ஏற்றிய 14 சக்கரங்கள் உள்ள லாரி திம்பம் மலைப் பாதை வழியாக பண்ணாரி சோதனைச் சாவடி வந்தது. லாரியை முகமது முபாரக் ஓட்டினாா். அப்போது வனச் சோதனைச் சாவடியில் இருந்த ஊழியா்கள் 14 சக்கர லாரியை நிறுத்தி வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளரிடம் ஒப்படைத்தனா். இதையடுத்து கோபி கோட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலா் பழனிவேலு திம்பம் மலைப் பாதையில் அனுமதியின்றி வந்ததாக லாரியை பறிமுதல் செய்ய உத்தரவிட்டாா்.