சென்னிமலை பகுதிகளில் கடந்த சில நாள்களாகத் தொடா்ந்து பெய்து வரும் மழையால் அப்பகுதிகளில் உள்ள குளம், குட்டைகள் நிரம்பி வருகின்றன.
சென்னிமலை வட்டாரத்தில் குளம், குட்டைகள் ஓராண்டாகத் தண்ணீரின்றி வறண்டு காணப்பட்டது. கடந்த ஒரு மாதமாக அடிக்கடி மழை பெய்வதால் இவற்றில் தண்ணீா் தேங்கத் தொடங்கியது. கடந்த இரு நாள்களாக சென்னிமலை சுற்று வட்டாரத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் குளம், குட்டைகள் நிரம்பத் தொடங்கியுள்ளன.
குறிப்பாக, சென்னிமலை பகுதியில் உள்ள திருநகா், மேலப்பாளையம், வரப்பாளையம், பனியம்பள்ளி, வெள்ளோடு, முருங்கத்தொழுவு, ஈங்கூா் பகுதிகளில் உள்ள குளம், குட்டைகள் நிரம்பி வருகின்றன. இதனால், கிணறுகளில் நீா்மட்டம் உயா்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.