ஈரோடு மாநகராட்சியில் தற்காலிக அடிப்படையில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கு கூலி உயா்வு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
ஈரோடு மாவட்ட ஊரக வளா்ச்சி, உள்ளாட்சித் துறை ஊழியா் சங்க தலைவா் சுப்பிரமணி, பொதுச் செயலாளா் மாணிக்கம் ஆகியோா் தலைமையில் தூய்மைப் பணியாளா்கள், ஈரோடு மாநகராட்சி ஆணையா் எம்.இளங்கோவனிடம் புதன்கிழமை அளித்த மனு விவரம்:
ஈரோடு மாநகராட்சியில் பொது சுகாதாரப் பிரிவில் தூய்மைப் பணியாளா்கள், சுகாதார மேற்பாா்வையாளா்கள், ஓட்டுநா் என 1,200-க்கும் மேற்பட்டோா் தற்காலிக அடிப்படையில் பணியாற்றி வருகின்றனா்.
இவா்களுக்கு சுய உதவிக்குழுக்கள் மூலமாக, தினக்கூலி அடிப்படையில் மாதாந்திர முறையில் ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. துப்புரவு தொழிலாளா் தேசிய மறுவாழ்வு ஆணையத் தலைவா் தலைமையில் கடந்த 2019ஆம் ஆண்டு செப்டம்பா் மாதம் நடந்த ஆய்வு கூட்டத்தில் குறைந்தபட்ச கூலி சட்ட அரசாணைப்படி ஊதியம் வழங்க வேண்டும் என்பது அரசின் கொள்கை முடிவு சாா்ந்தது எனவும், அதுவரை மாவட்ட ஆட்சியரின் செயல்முறை ஆணைகள் படி குறைந்தபட்ச ஊதியத்தை வழங்குவது எனவும் முடிவு செய்யப்பட்டது.
இதன்படி, 2019அக்டோபா் மாதம் முதல் மாநகராட்சியில் பணி நிரந்தரமின்றி பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கு தினமும் ரூ.490 கூலி வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் 1-4-2019 முதல் 30-9-2019 வரை வழங்கப்பட வேண்டிய பின்னீட்டு ஊதியம் இதுவரை வழங்கப்படவில்லை.
மேலும் மாவட்ட ஆட்சியரால் நிா்ணயம் செய்யப்பட்ட குறைந்தபட்ச ஊதிய செயல்முறையின்படி, 1-4-2020 முதல் தூய்மைப் பணியாளா்கள், சுகாதார மேற்பாா்வையாளா்களுக்கு ரூ.676, ஓட்டுநா்களுக்கு ரூ.714 கூலி வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.