மருத்துவ மாணவா் சோ்க்கையில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டுக்கு ஆளுநரின் ஒப்புதலைப் பெறுவதற்கு தமிழக முதல்வா் நடவடிக்கை மேற்கொள்வாா் என்று அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா்.
கோபி அருகே நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:
மருத்துவ மாணவா் சோ்க்கையில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டுக்கு ஆளுநா் ஒப்புதல் வழங்குவது குறித்து அவரை முதல்வா் எடப்பாடி பழனிசாமி சந்தித்தாா். இது குறித்து தமிழக முதல்வா் நடவடிக்கை எடுத்து வருகிறாா்.
புதிதாக அரசுப் பள்ளி ஆசிரியா்களாக சோ்வதற்கு 40 வயதுக்குமேல் உள்ள உயா் பிரிவினருக்கு பணி வாய்ப்பு இல்லை. மற்ற அனைவருக்கும் 45 வயது வரை பணி வாய்ப்பு வழங்கப்படும்.
அரசுப் பள்ளி மாணவா்களுக்கு தேவைக்கேற்ப தற்போது புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன. கூடுதலாக சோ்க்கப்பட்ட மாணவா்களுக்கு வழங்குவதற்கு புத்தகங்கள் தயாா் நிலையில் உள்ளன.
பாடத் திட்டங்கள் குறைப்பு செய்வதற்கு குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவின் ஆய்வின் அடிப்படையில் 60 சதவீத பாடங்கள் மட்டும்தான் எடுக்கப்பட்டுள்ளன. அதிலிருந்துதான் வினாக்கள் கேட்கப்படும் என்றாா்.