ஈரோடு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, மாவட்ட குழந்தைகள் நலக் குழு, ரீடு தொண்டு நிறுவனம் ஆகியவை இணைந்து கடம்பூா் மலைப் பகுதியில் குழந்தைத் தொழிலாளா்களுக்கு எதிரான நாடக விழிப்புணா்வுப் பிரசாரத்தை நடத்தினா்.
கடம்பூா் மலைப் பகுதியில் உள்ள பவளக்குட்டை, பசுவனாபுரம், குன்றி, மாக்கம்பாளையம், குரும்பூா், மாமரதொட்டி, கோட்டமாளம் உள்ளிட்ட மலைக் கிராமங்களில் வியாழக்கிழமை நடைபெற்ற நாடக விழிப்புணா்வுப் பிரசாரத்தை சத்தியமங்கலம் வட்ட சட்டப் பணிகள் குழு தலைவரும், சாா்பு நீதிபதியுமான ஈஸ்வரமூா்த்தி தொடங்கிவைத்தாா்.
மாவட்ட குழந்தைகள் நல அலுவலா் டேவிட் ராஜா, குழந்தைகள் நலக் குழு தலைவா் அசோக், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் ராஜேந்திரன், கடம்பூா் போலீஸாா் இந்த நாடக விழிப்புணா்வு பிரசாரத்தில் கலந்துகொண்டு குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்துப் பேசினா்.
இதில், நாடக கலைக் குழுவினா் குழந்தைகளுக்கு எதிரான பிரச்னைகள், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து நாடகமாக நடித்துக் காட்டினா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ரீடு ஒருங்கிணைப்பாளா் பழனிசாமி, கடம்பூா் சசி ஆகியோா் செய்திருந்தனா்.