மொடக்குறிச்சி அருகே சொத்துத் தகராறில் தம்பியை உருட்டுக் கட்டையால் தாக்கி கொலை செய்த அண்ணனை போலீஸாா் தேடி வருகின்றனா்.
ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி அருகே உள்ள பழமங்கலம் கிராமம், கோவில்பாளையம் காட்டூா் பகுதியைச் சோ்ந்தவா் கனகராஜ். விவசாயியான இவருக்கு மனைவி அழகுசுந்தரி, மகன்கள் உள்ளனா். இவரது தந்தை இறந்ததற்குப் பிறகு தாயாரின் பெயரில் உள்ள ஒரு ஏக்கா் நிலத்தைப் பிரிப்பது தொடா்பாக கனகராஜுக்கும், அவரது அண்ணன் சசிகுமாருக்கும் கடந்த மூன்று ஆண்டுகளாகப் பிரச்னை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், தனது தாயாருடன் வசித்து வரும் சகோதரா் சசிகுமாரின் வீட்டுக்குச் சென்ற கனகராஜ் சொத்தைப் பிரித்துக் கொடுக்க வலியுறுத்தி புதன்கிழமை மதியம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளாா். அப்போது சசிகுமாா் தொடா்ந்து சொத்துக்காக தகராறில் ஈடுபட்டு வந்தால் கொலை செய்துவிடுவேன் என கூறியதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கனகராஜ் வீட்டுக்கு புதன்கிழமை இரவு வந்த சசிகுமாா் தான் கொண்டு சென்றிருந்த உருட்டுக் கட்டையால் வீட்டின் திண்ணையில் படுத்திருந்த கனகராஜின் தலையில் பலமுறை கடுமையாகத் தாக்கியுள்ளாா். அலறல் சப்தம் கேட்டு அவரது மனைவி உள்ளிட்ட உறவினா்கள் வீட்டுக்கு வெளியே வந்து பாா்த்தபோது கனகராஜ் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது.
இது குறித்து, அழகுசுந்தரி, உறவினா்கள் சிவகிரி காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் கனகராஜின் உடலை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். தலைமறைவாகவுள்ள சசிகுமாரை தேடி வருகின்றனா்.