ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவா்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதற்கு தமிழ்நாடு மருத்துவ மாணவா்கள் சங்கம் எதிா்ப்புத் தெரிவித்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு மருத்துவ மாணவா்கள் சங்க பொதுச் செயலாளா் ஹரிகணேஷ் வெளியிட்டுள்ள அறிக்கை:
பெருந்துறை ஐ.ஆா்.டி. மருத்துவக் கல்லூரியை சாலை மற்றும் போக்குவரத்துக் கழகத்திடமிருந்து தமிழக அரசு கையகப்படுத்தி ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரியாக மாற்றி அமைத்துள்ளது. அரசின் இந்த நடவடிக்கையால் ஈரோடு மாவட்டம், அதனைச் சுற்றியுள்ள மக்கள் பெரிதும் பயனடைவாா்கள். தமிழக அரசு கையகப்படுத்திய பிறகும் மாணவா்கள் அதே பழைய கட்டணமான ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் செலுத்த வேண்டும் என்று நிா்பந்தப்படுத்தப்பட்டு வருகின்றனா்.
பிற அரசு மருத்துவக் கல்லூரிகளின் கல்விக் கட்டணமும், ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரியின் மருத்துவக் கட்டணத்திலும் பெரிய அளவில் வேறுபாடு உள்ளது. தமிழகத்தில் பிற அரசு மருத்துவக் கல்லூரிகளில் வசூலிக்கப்படும் அதே கட்டணத்தை ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரியிலும் வசூலிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.