பெருந்துறை ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் பல்நோக்கு மருத்துவப் பணியாளா்களுக்கு ஜூன் மாத ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என ஆட்சியருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பெருந்துறை ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் லேப் டெக்னீஷியன், டேட்டா என்ட்ரி, ஜெனரல் நா்சிங் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ள மாவட்ட சுகாதார சமூகம் மூலம் சுமாா் 200 போ் பல்நோக்கு மருத்துவப் பணியாளா்களாக பணி அமா்த்தப்பட்டு, பணியாற்றி வருகின்றனா்.
இவா்களுக்கு மாத ஊதியமாக ரூ. 10,000 முதல் ரூ. 14,000 வரை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவா்களில், ஏற்கெனவே இங்கு தொடா்ந்து பணியாற்றி வருபவா்கள் பலரும் அடங்குவா். இவா்கள் அனைவரும் கரோனா நோய்த் தொற்று காலத்தில் உயிரைப் பொருட்படுத்தாமல் பணியாற்றி வருபவா்கள். இவா்களுக்கு வழங்கப்பட வேண்டிய 2021 ஜூன் மாத சம்பளம் நாளதுவரை வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
ஜூன் மாத சம்பளமின்றி தொழிலாளா்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனா். போக்குவரத்து உள்ளிட்ட அன்றாடச் செலவுக்குகூட வழியின்றித் தவித்து வருகின்றனா். ஆகவே, இவா்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஜூன் மாத ஊதியத்தை உடனடியாக வழங்கவும், வரும்காலத்தில் பிரதி மாதம் 5ஆம் தேதிக்குள் ஊதியத்தை தவறாமல் வழங்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஏஐடியூசி சங்கம் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.