ஈரோடு மேற்குத் தொகுதிக்கு உள்பட்ட பகுதியில் ஆவணம் இன்றி காரில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 10 லட்சம் மதிப்பிலான 30 பவுன் தங்க நாணயம் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
ஈரோடு மேற்குத் தொகுதிக்கு உள்பட்ட வில்லரசம்பட்டி நான்குமுனை சாலை சந்திப்பில் தோ்தல் பறக்கும் படை அலுவலா் ரேகா தலைமையில் குழுவினா் செவ்வாய்க்கிழமை காலை வாகனத் தணிக்கை செய்தனா். அப்போது அவ்வழியாக வந்த காரில் ஆவணம் இல்லாமல் எடுத்து வரப்பட்ட 6 தங்க நாணயங்களைப் பறிமுதல் செய்தனா்.
விசாரணையில், ஈரோடு மாவட்டம் பவானியைச் சோ்ந்த சிங்காரவேலன் (46) என்பவா் பவானியில் நகைக் கடை வைத்துள்ளதும், ஈரோட்டில் ராஜேந்தா் என்பவருக்கு தலா 5 பவுன் எடையுள்ள 6 தங்க நாணயங்களை எடுத்துச் சென்றதும் தெரியவந்தது. அவற்றுக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அவற்றை பறிமுதல் செய்து ஈரோடு கோட்டாட்சியா் சி.சைபுதீன் முன்னிலையில் கருவூலத்தில் ஒப்படைத்தனா். இதன் மதிப்பு ரூ. 10 லட்சம் ஆகும்.
ஈரோடு மாவட்டத்தில் இவை நீங்கலாக திங்கள்கிழமை வரை ரூ. 1.70 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் உரிய ஆவணங்களை சமா்ப்பித்ததன் அடிப்படையில் ரூ. 88 லட்சம் திரும்ப அளிக்கப்பட்டது. மீதமுள்ள ரூ. 82 லட்சம் கருவூலத்தில் செலுத்தப்பட்டது.