சத்தியமங்கலம் - மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் யானைகள் கூட்டமாக வியாழக்கிழமை சுற்றித் திரிந்ததால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனா்.
தமிழகத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதன் காரணமாக அத்தியாவசியப் பொருள்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களைத் தவிர மற்ற வாகனங்களுக்கு அனுமதி இல்லாததால் தமிழக - கா்நாடக மாநிலத்தை இணைக்கும் சத்தியமங்கலம் - மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் வாகனப் போக்குவரத்து இன்றி வெறிச்சோடிக் காணப்படுகிறது.
சத்தியமங்கலம் - மைசூரு நெடுஞ்சாலையில் அவ்வப்போது யானை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாடுவது வழக்கம். தற்போது ஊரடங்கு காரணமாக தேசிய நெடுஞ்சாலை வெறிச்சோடிக் காணப்படுவதால் ஆசனூா் வனப் பகுதியில் இருந்து வெளியேறிய யானைகள் தேசிய நெடுஞ்சாலையில் கூட்டம் கூட்டமாக தனது குட்டிகளுடன் சுற்றித் திரிகின்றன.
இந்நிலையில், காரப்பள்ளம் வன சோதனைச் சாவடி பகுதியில் ஐந்துக்கும் மேற்பட்ட யானைகள் தேசிய நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை சுற்றித் திரிந்தன. யானைகள் சாலையில் சுற்றித் திரிவதால் அத்தியாவசியப் பொருள்களான காய்கறி, பால் உள்ளிட்ட பொருள்களை ஏற்றிச் செல்லும் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனா்.
இந்த யானைகளை வனத் துறையினா் கண்காணித்து வருகின்றனா். அத்தியாவசியப் பொருள்களைக் கொண்டு செல்லும் வாகன ஓட்டிகள் யானை உள்ளிட்ட வன விலங்குகள் சாலையில் நடமாடுவதைக் கண்டால் வாகனத்தை நிறுத்தி வன விலங்குகள் சாலையைக் கடந்த பின் செல்லுமாறு அறிவுறுத்தி வருகின்றனா்.