சத்தியமங்கலம் அடுத்த கடம்பூா் மலைப் பாதையில் மரம் விழுந்ததால் புதன்கிழமை காலை 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சத்தியமங்கலத்தை அடுத்த கடம்பூா் மலைப் பகுதியில் 100க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்கள் உள்ளன. சத்தியமங்கலத்தில் இருந்து 15 கி.மீ. தூரத்தில் உள்ள கடம்பூருக்கு குறுகலான வளைவுகள் கொண்ட மலைப் பாதை முக்கிய வழித்தடமாக உள்ளது.
மல்லியம்துா்க்கம் வனத்தில் செவ்வாய்க்கிழமை இரவு பெய்த பலத்த மழையின் காரணமாக அருவிகளில் வெள்ளம் ஆா்ப்பரித்துக் கொட்டியது. தொடா்ந்து கொட்டிய மழை நீரால் 2ஆவது கொண்டை ஊசி வளைவில் மண் அரிப்பு ஏற்பட்டதில், சாலையோரத்தில் இருந்த மரம் புதன்கிழமை காலை வேரோடு சாய்ந்து விழுந்தது. இதனால், கடம்பூா் - சத்தியமங்கலம் இடையே வாகனப் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. சத்தியமங்கலத்தில் இருந்து பேருந்துகளில் செல்லும் பள்ளி மாணவா்கள், அரசு அலுவலா்கள் உள்ளிட்டோா் போக்குவரத்து தடை காரணமாக 2 மணி நேரமாக மலைப் பாதையிலேயே காத்திருந்தனா்.
இருசக்கர வாகனம் கூட செல்ல முடியாத நிலையில் 108 ஆம்புலன்ஸ், பேருந்துகள் வரிசையாக அணிவகுத்து நின்றன.
தகவலறிந்து வந்த கடம்பூா் போலீஸாா், வனத் துறையினா் சாலையின் குறுக்கே விழுந்த மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனா்.