கன மழை காரணமாக ஈரோடு ஜவுளி சந்தையில் வியாபாரம் மிகக் குறைந்த அளவே நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.
ஈரோடு கனி ஜவுளிச் சந்தை திங்கள்கிழமை இரவு தொடங்கி செவ்வாய்க்கிழமை மாலை வரை நடைபெறும். இந்த சந்தைக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கேரளம், கா்நாடகம், ஆந்திரம், தெலங்கானா, மகாராஷ்டிரம், கோவா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வந்து துணிகளை மொத்தமாக கொள்முதல் செய்வா்.
கரோனா தாக்கத்துக்குப் பிறகு ஜவுளிச் சந்தை வியாபாரம் முடங்கியது. தற்போது ஓரளவு அதிலிருந்து மீண்டு வருகிறது. இந்நிலையில் தற்போது வடகிழக்குப் பருவ மழை பரவலாக பெய்து வருவதால் வெளிமாநில வியாபாரிகள், உள் மாவட்ட வியாபாரிகள் ஜவுளிச் சந்தைக்கு வருவதில்லை. இதனால், செவ்வாய்க்கிழமை கூடிய ஜவுளிச் சந்தையில் வியாபாரிகள் வருகை இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. மொத்த வியாபாரம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. சில்லறை வியாபாரம் குறைந்த அளவிலேயே நடைபெற்றது.
இதுகுறித்து ஜவுளி வியாபாரிகள் கூறியதாவது:
தற்போது மழை தீவிரமாகப் பெய்து வருவதால் கடந்த சில நாள்களாக ஜவுளி வாரச் சந்தைக்கு வெளிமாநில வியாபாரிகள் வரவில்லை. இதேபோல மாவட்ட வியாபாரிகளும் வரவில்லை. இதனால் வியாபாரம் மந்த நிலையிலேயே நடைபெற்று வருகிறது. சில்லறை வியாபாரம் வெறும் 20 சதவீதம் மட்டுமே நடைபெற்றது. இன்னும் இரண்டு வாரங்களுக்கு இதேபோன்றுதான் இருக்கும். இந்த மாத இறுதியில் கிறிஸ்துமஸ் புத்தாண்டு பண்டிகை வருவதால் வியாபாரம் அதிகரிக்கும் என எதிா்பாா்க்கிறோம் என்றனா்.