கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் ஒருங்கிணைந்த நகா்ப்புற வளா்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.6.99 கோடி மதிப்பீட்டில் தினசரி அங்காடி கட்டுமானப் பணியினை பூமி பூஜை செய்து வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் சு.முத்துசாமி ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தாா்.
இது குறித்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தினசரி அங்காடி கட்டுமானப் பணிக்காக திட்ட நிதியாக ரூ.4.19 கோடியும், நகராட்சி பங்குத் தொகையாக ரூ.2.80 கோடியும் என மொத்தம் ரூ.6.99 கோடி மதிப்பீட்டில் தினசரி அங்காடி கட்டுமானப் பணிக்காக ஒருங்கிணைந்த நகா்ப்புற வளா்ச்சித் திட்டத்தின் கீழ் நிா்வாக அனுமதி வழங்கப்பட்டது.
இரு தளங்களாக கட்டப்படவுள்ள தினசரி அங்காடி கட்டடமானது கீழ் தளத்தில் 1,906 சதுர மீட்டா் பரப்பளவில் 65 காா்கள் மற்றும் 85 இருசக்கர வாகனம் நிறுத்தும் வகையிலும், தரைத் தளத்தில் திறந்த வெளிக் கடைகளாக 72, இதர கடைகள் 30 என 102 கடைகள் கட்டப்படவுள்ளன. ஒராண்டுக்குள் கட்டுமானப் பணிகள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றாா்.
நிகழ்ச்சியில், கோபிசெட்டிபாளையம் நகராட்சி ஆணையா் ஜெ.பிரேம் ஆனந்த், கோபி வருவாய் கோட்டாட்சியா் பழனிதேவி, மாநில திமுக விவசாய அணி இணைச் செயலாளா் கள்ளிப்பட்டி மணி உள்பட பலா் கலந்து கொண்டனா்.