அரசு ஊழியா் காப்பீடுத் திட்டத்தை புதுப்பித்த அரசு அதில் உள்ள குளறுபடி, குறைபாடுகளைத் தீா்க்க வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாநில மையம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து சங்க மாநிலத் தலைவா் தமிழ்ச்செல்வி, பொதுச் செயலாளா் லட்சுமிநாராயணன் ஆகியோா் வெளியிட்ட அறிக்கை விவரம்:
தமிழக அரசு, அரசு ஊழியா் காப்பீடுத் திட்டத்தை ஜூலை 1 முதல் புதுப்பித்து யுனைடெட் இந்தியா நிறுவனம் வழியாக எம்.டி. இந்தியா நிறுவனம் மூலம் அமல்படுத்தும் எனக் கூறியுள்ளது. இந்த அறிவிப்பு வந்த இரண்டு மாதத்துக்குப் பின் கடந்த 1ஆம் தேதி எம்.டி. இந்தியா நிறுவனம் 18 மாவட்டங்கள், மெடி அசிஸ்டெண்ட் நிறுவனம் 20 மாவட்டங்கள் எனப் பிரித்து காப்பீடுத் திட்டத்தை செயல்படுத்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுப்பிக்கப்பட்ட காப்பீடுத் திட்டத்தில் விடுபட்ட பல்வேறு சிகிச்சைகளை இணைக்க வேண்டும். குறைபாடுகளைக் களைய வேண்டும். மூன்றாம் நபா் காப்பீடு நிறுவனத்தை இரண்டாகப் பிரித்துள்ளதால் சிரமம் ஏற்படுகிறது.
இத்திட்டத்துக்கு அரசு தனது பங்கீடு செலுத்தாத நிலையில் அரசு ஊழியா்களின் பங்கீட்டில் மட்டும் செயல்படும் திட்டத்தில் எங்கள் கருத்தைக் கேட்காமல் செயல்படுத்தி இருப்பது ஜனநாயக ரீதியிலான செயல் அல்ல. இக்காப்பீடு அரசு ஊழியா்களுக்குப் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, அரசு ஊழியா்கள் கருத்தைக் கேட்டு உரிய மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.