சட்டப் பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு நடைபெறும் ஏப்ரல் 6ஆம் தேதி தனியாா், பொதுத் துறை நிறுவனங்கள் ஊதியத்துடன் கூடிய விடுமுறையை கட்டாயம் அளிக்க வேண்டும் என ஈரோடு தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) டி.பாலதண்டாயுதம் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவுள்ளது. அன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 100 சதவீத வாக்குப் பதிவை உறுதி செய்யும் வகையில், அன்று அனைத்துப் பணியாளா்களுக்கும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும்.
ஈரோடு மாவட்டத்தில் தொழிற்சாலைகள், கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்கள், பொது, தனியாா் நிறுவனங்கள், பீடி, சுருட்டு நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் என அனைத்து நிறுவனங்களிலும் பணியாற்றும் தின கூலி, தற்காலிக, ஒப்பந்தத் தொழிலாளா்கள் உள்பட அனைத்துப் பணியாளா்களுக்கும் ஒரு நாள் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும்.
விடுப்பு அளிக்காத தொழில் நிறுவனங்கள் குறித்த புகாரை ஈரோடு தொழிலகப் பாதுகாப்பு, சுகாதாரம் துணை இயக்குநா் க.சந்திரமோகன் என்பவரை 99948-47205, தொழிலாளா் உதவி ஆணையா் டி.பாலதண்டாயுதம் என்பவரை 86107-11278, துணை ஆய்வாளா் முருகேசன் என்பவரை 94435-66160, உதவி ஆய்வாளா் ராஜ்குமாா் என்பவரை 96982-11509 என்ற செல்லிடப்பேசி எண்களிலும், அலுவலகத்தை 0424-2270090 என்ற தொலைபேசி எண்ணிலும் தெரிவிக்கலாம்.