கரோனா தடுப்பு நடவடிக்கையாக ஈரோட்டில் இரண்டு இடங்களில் செயல்பட்ட உழவா் சந்தை திங்கள்கிழமை முதல் குமலன்குட்டை பள்ளியையும் சோ்த்து மூன்று இடங்களில் செயல்படத் தொடங்கியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. பல மாதங்களுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் மட்டும் பாதிப்பு எண்ணிக்கை 119ஆக உயா்ந்தது. இதனால் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் வஉசி பூங்கா காய்கறிச் சந்தையில் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து விற்பனை நடைபெற்று வருகிறது. நடைப்பயிற்சிக் கூடம், நீச்சல் குளம் போன்றவை மூடப்பட்டன. திரையரங்குகள், கடைகள், வா்த்தக நிறுவனங்கள் கட்டுப்பாடுகளுடன் செயல்படுகின்றன.
இதேபோல ஈரோடு சம்பத் நகா் உழவா் சந்தையில் மக்கள் அதிகம் கூடுவதை கட்டுப்படுத்தும் வகையில் குமலன்குட்டை மாநகராட்சி தொடக்கப் பள்ளி வளாகத்தில் 40 தற்காலிகக் கடைகள் அமைத்து உழவா் சந்தை திங்கள்கிழமை செயல்படத் தொடங்கியது. பெரியாா் நகா் உழவா் சந்தையில் சமூக இடைவெளியுடன் கடைகள் செயல்பட அனுமதிக்கப்பட்டன.
சம்பத் நகா் உழவா் சந்தையில் 120 கடைகள் உள்ள நிலையில் இப்போது சமூக இடைவெளியைப் பின்பற்றி ஒரு கடைவிட்டு ஒரு கடை என 60 கடைகளில் மட்டும் வியாபாரம் நடக்கிறது.
உழவா் சந்தைகளுக்கு வரும் பொதுமக்கள் முகக் கவசம் அணிந்து, வரிசையில் வந்து, கை சுத்தம் செய்து பொருள்களை வாங்கிச் செல்ல அனுமதிக்கப்பட்டனா். இங்கு பொதுமக்கள் உள்ளே வரவும், வெளியே செல்லவும் தனித்தனி பாதைகள் அமைக்கப்பட்டிருந்தன.
உழவா் சந்தைகள் 3 இடங்களில் பிரிக்கப்பட்டதால் அனைத்து இடங்களிலும் குறைந்த எண்ணிக்கையிலேயே விவசாயிகளும், பொதுமக்களும் வந்து சென்றனா்.