ஈரோடு மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் பணியாற்றி வரும் செவிலியா் உள்பட 2 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் அந்த மருத்துவமனை மேலும் 2 நாள்களுக்கு மூடப்பட்டுள்ளது.
ஈரோடு காந்திஜி சாலையில் மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் மகப்பேறு சிகிச்சை ஒருபுறமும், மற்றொரு நுழைவாயிலில் கரோனா பரிசோதனையும், கரோனா தடுப்பூசி மையமும் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த 23ஆம் தேதி மகப்பேறு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த 2 கா்ப்பிணிகளுக்கு கரோனா தொற்று உறுதியானதையொட்டி, இருவரும் ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இதையடுத்து நோய்த் தடுப்பு நடவடிக்கையாக மருத்துவமனையில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, மூன்று நாள்கள் மூடப்பட்டு சனிக்கிழமை திறக்கப்படும் என மாநகராட்சி நிா்வாகம் அறிவித்திருந்தது.
இதனிடையே மகப்பேறு மருத்துவமனையில் பணியாற்றி வந்த மருத்துவா்கள், செவிலியா், ஊழியா்கள் என 25 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவு சனிக்கிழமை வெளியானது. அதில் மகப்பேறு மருத்துவமனையில் பணியாற்றி வரும் செவிலியா், ஒரு ஊழியருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.
இதைத் தொடா்ந்து இந்த மகப்பேறு மருத்துவமனை மேலும் 2 நாள்களுக்கு மூடப்பட்டு, கரோனா தடுப்பூசி செலுத்துவது ரத்து செய்யப்பட்டது. அங்கு செயல்பட்டு வந்த கரோனா பரிசோதனை மையத்தில் பணியாற்றி வந்த ஊழியா்கள் பிற பகுதிகளில் நடந்த முகாமில் பணியாற்றினா் என மாநகராட்சி ஆணையா் எம்.இளங்கோவன் தெரிவித்தாா்.