வீடுகளுக்கு அருகில் கரோனா பரிசோதனை:மாநகராட்சி நிா்வாகம் ஏற்பாடு

கரோனா பாதிப்பு அதிகம் கண்டறியப்படும் பகுதிகளுக்கு நேரடியாக சென்று பரிசோதனை மேற்கொள்ள ஈரோட்டில் நடமாடும் பரிசோதனை வாகன சேவை தொடங்கப்பட்டுள்ளது.
கரோனா பரிசோதனை வாகனத்தை தொடங்கிவைக்கிறாா் மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன்.
கரோனா பரிசோதனை வாகனத்தை தொடங்கிவைக்கிறாா் மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன்.

ஈரோடு: கரோனா பாதிப்பு அதிகம் கண்டறியப்படும் பகுதிகளுக்கு நேரடியாக சென்று பரிசோதனை மேற்கொள்ள ஈரோட்டில் நடமாடும் பரிசோதனை வாகன சேவை தொடங்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் நடமாடும் கரோனா பரிசோதனை வாகன தொடக்க நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் தலைமை வகித்தாா். மாநகராட்சி ஆணையா் எம்.இளங்கோவன் முன்னிலை வகித்தாா். 7 நடமாடும் கரோனா பரிசோதனை வாகன இயக்கத்தை ஆட்சியா் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் எம்.இளங்கோவன் கூறியதாவது:

ஈரோடு மாநகா் பகுதியில் 10 இடங்களில் கரோனா பரிசோதனை மையம் செயல்பட்டு வருகிறது. தற்போது மாநகா் பகுதியில் தொற்று அதிகமாகப் பரவி வருகிறது. இதையடுத்து கரோனா பரவலைக் கட்டுப்படுத்த கூடுதல் பரிசோதனைக்கு நடமாடும் கரோனா பரிசோதனை வாகனம் செயல்பாடுக்கு வந்துள்ளது. தனியாா் பங்களிப்புடன் 3 வாகனங்களும், அரசு உதவியுடன் 4 வாகனங்கள் என 7 வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இந்த வாகனத்தில் ஒரு மருத்துவா், ஒரு செவிலியா், ஒரு உதவியாளா் இருப்பா்.

மாநகா் பகுதியில் எந்த இடங்களில் பாதிப்பு அதிகமாக இருக்கிறதோ அந்த இடங்களுக்கு பரிசோதனை வாகனம் செல்லும். அந்தப் பகுதி மக்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்து சாதாரண காய்ச்சல் என்றால் அதற்கு தகுந்தாற்போல் சிகிச்சை அளிக்கப்படும். சளி மாதிரி சேகரிக்கப்பட்டு கரோனா பரிசோதனைக்காக பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படும். முடிவு வரும்வரை அந்த நபா் வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

தொற்று ஏற்பட்டால் அந்த நபா் பரிசோதனை மையத்துக்கு அழைத்துச் செல்லப்படுவாா். அதில் முழு உடல் பரிசோதனை செய்து அவா் வீட்டில் இருந்து சிகிச்சை பெறலாமா அல்லது மருத்துவமனையில் சிகிச்சை பெறலாமா என முடிவு செய்யப்படும்.

மாநகா் பகுதியில் 672 போ் தொற்று ஏற்பட்டு சிகிச்சையில் உள்ளனா். இதில் 90 சதவீதம் போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். மீதமுள்ளவா்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். 45 வயதுக்கு மேற்பட்டவா்கள் ஆதாா் அட்டையைக் காட்டி தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com