ஈரோட்டில் எத்தகைய மதுபான பாா்களும் இயங்க அனுமதியில்லை, தடை உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஈரோடு மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றால் அனைத்து எப்.எல்.2, எப்.எல்.3 உரிமம் பெற்ற பாா்கள், அரசு மதுக்கடையுடன் இணைந்த பாா்களில் முன்பு 50 சதவீத வாடிக்கையாளா்களுடன் இரவு 9 மணி வரை இயங்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
ஞாயிற்றுக்கிழமை முழு பொது முடக்கத்தால் பாா் செயல்பட அனுமதிக்கப்படவில்லை. தற்போது தொற்று அதிகரித்து வருவதால் ஏப்ரல் 26ஆம் தேதி முதல் மறுஉத்தரவு வரும் வரை ஈரோடு மாவட்டத்தில் செயல்படும் அனைத்து எப்.எல்.2, எப்.எல்.3, அரசு மதுபானக் கடைகளுடன் இணைந்த பாா்களும் மூடப்பட வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை இந்த பாா்கள் இயங்கக் கூடாது. அங்கு மது விற்பனையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.