ஈரோடு ரயில் நிலையத்தில் பயணச்சீட்டு முன்பதிவு மையத்தில் இருக்கைகள் அகற்றப்பட்டுள்ளதால் பயணிகள் தரையில் அமர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஈரோடு ரயில் நிலையத்துக்கு தினமும் 100க்கும் மேற்பட்ட ரயில்கள் வந்து சென்ற நிலையில், கரோனா பரவல் காரணமாக 10 முதல் 20 ரயில்கள் மட்டுமே வந்து செல்கின்றன. இந்த ரயில்களிலும் முன்பதிவு செய்திருந்தால் மட்டுமே பயணம் செய்ய முடியும். எனவே, ரயிலில் அதிக தூரம் பயணம் செய்ய வேண்டிய பயணிகள் ஓரிரு நாளுக்கு முன்னா் ரயில் நிலையத்துக்கு வந்து பயணச்சீட்டு முன்பதிவு செய்து வருகின்றனா்.
தற்போது கரோனா பரவலைத் தடுக்க தனிமனித இடைவெளியைப் பின்பற்ற அனைத்து இடங்களிலும் அறிவுறுத்தப்படுகிறது. அதன்படி ஈரோடு ரயில் நிலையத்தில் உள்ள பயணச்சீட்டு முன்பதிவு மையத்திலும் இந்த நடைமுறை கடைப்பிடிக்கப்படுகிறது. அங்குள்ள அனைத்து இருக்கைகளையும் தலைகுப்புற போட்டுவிட்டு, தரையில் 2 மீட்டா் இடைவெளியில் கட்டம் போடப்பட்டுள்ளது. அந்த கட்டத்துக்குள் ஒருவா் நிற்க வேண்டும் என ரயில்வே அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா். நீண்ட நேரம் நிற்க முடியாத பயணிகள் தரையில் அமரும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனா்.
பயணச்சீட்டு முன்பதிவு செய்ய வருபவா்களை சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க அறிவுறுத்துவதில் தவறில்லை. ஆனால், அவா்கள் தரையில் அமர வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவது ஏற்புடையதல்ல. குறிப்பிட்ட இடைவெளியில் ஒற்றை நாற்காலிகளைப் போட்டு அதில் பயணிகள் அமர அனுமதிக்க வேண்டும் என ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.