ஈரோடு மாநகரில் 35 டன் குப்பைகள் அகற்றம்

ஈரோடு மாநகா் பகுதியில் ஒரே வாரத்தில் மாஸ் கிளினிங் மூலம் 35 டன் குப்பைக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன.

ஈரோடு மாநகா் பகுதியில் ஒரே வாரத்தில் மாஸ் கிளினிங் மூலம் 35 டன் குப்பைக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன.

ஈரோடு மாநகராட்சியில் 4 மண்டலங்களில் மொத்தம் 60 வாா்டுகள் உள்ளன. தற்போது மழைக் காலம் தொடங்கி உள்ளதால் 4 மண்டலங்களிலும் கழிவுநீா் ஓடைகளை தூா்வாரி சுத்தம் செய்யும் பணி, டெங்கு காய்ச்சல் தடுப்புப் பணியினை ஒருங்கிணைந்து மேற்கொள்ள மாஸ் கிளினிங் என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் மூலம் ஒவ்வொரு பகுதிகளிலும் 100 தூய்மைப் பணியாளா்களைக் கொண்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த ஒரு வாரமாக 4 மண்டலங்களில் 16 இடங்களில் தூய்மைப் பணியாளா்கள் மூலம் இந்தப் பணி மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் ஈரோடு மாநகா் பகுதியில் கடந்த ஒரே வாரத்தில் 35 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன. எஞ்சிய பகுதிகளிலும் சுழற்சி முறையில் மாஸ் கிளினிங் பணி நடைபெறவுள்ளது.

இது குறித்து ஈரோடு மாநகராட்சி ஆணையா் எம்.இளங்கோவன் கூறியதாவது:

மாநகராட்சியின் அனைத்து வாா்டுகளிலும் ஒருங்கிணைந்த சிறப்பு துப்புரவுப் பணி மற்றும் டெங்கு காய்ச்சல் தடுப்புப் பணி ஆகியவை மாஸ் கிளினிங் மூலம் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு பகுதியிலும் சுகாதார ஆய்வாளா், உதவி சுகாதார ஆய்வாளா் தலைமையில் சாக்கடை அடைப்புகளை நீக்குதல், தூா்வாருதல், குப்பைகளை அகற்றுதல், மழைநீா் செல்லத் தடையாக உள்ள பகுதிகளை கண்டறிந்து ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், மரக்கிளைகள், தேவையின்றி வளா்ந்துள்ள புதா்களை அகற்றுதல் போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும், மழைநீா் தேங்கி நிற்கும் இடங்களைக் கண்டறிந்து வடிகால்களை அமைத்தல், பொதுமக்களுக்கு டெங்கு பரவல் குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனை மாநகராட்சி உதவி ஆணையா்கள் ஆய்வு செய்து வருகின்றனா்.

ஒரே நேரத்தில் 100 பணியாளா்களை கொண்டு ஒரே இடத்தில் மாஸ் கிளினிங் செய்வதால் அந்தப் பகுதி முழுமையாக சுத்தப்படுத்த முடிகிறது. அதேபோல சாக்கடை கழிவுகளை அடுத்த நாளே அப்புறப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் இந்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 4 மண்டலங்களில் 16 இடங்களில் மாஸ் கிளினிங் மூலம் 35 டன் குப்பைக் கழிவுகள், சாக்கடைக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. டெங்கு தடுப்புப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இனி வரும் நாள்களில் வாரத்தில் 3 நாள்கள் மட்டும் மாஸ் கிளினிங் பணிகள் நடைபெறும்.

இந்தத் திட்டத்துக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. பொதுமக்கள் தெரிவிக்கும் புகாரின் அடிப்படையிலேயே மாஸ் கிளினிங் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com