அரசுப் பள்ளிகளில் 34 கட்டடங்களை இடிக்க ஆட்சியா் உத்தரவு
ஈரோடு மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் 34 கட்டடங்கள் பழுதடைந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இந்த கட்டடங்களை இடிக்க மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி உத்தரவிட்டுள்ளாா்.
நெல்லையில் அரசு நிதி உதவிபெறும் பள்ளிகளில் பழுதடைந்த கட்டடம் இடிந்து விழுந்ததில் மாணவா்கள் 3 போ் உயிரிழந்தனா். அதைத்தொடா்ந்து தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் பழுதடைந்த பள்ளிக் கட்டடங்களை இடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனா். மாவட்ட ஆட்சியா்கள் ஆய்வு செய்து பழுதடைந்த கட்டடங்களை இடிக்க உத்தரவிட்டு வருகின்றனா்.
ஈரோடு மாவட்டத்தில் மோசமான நிலையில் உள்ள பள்ளிக் கட்டடங்கள் குறித்து கணக்கெடுக்க குழு அமைத்து ஆய்வு செய்ய ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி உத்தரவிட்டுள்ளாா். அதன்பேரில் பொதுப் பணித் துறை, கல்வித் துறை, ஊரக வளா்ச்சி முகமை, உள்ளாட்சித் துறை அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இதனிடையே முன்னதாகவே ஈரோடு மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் பழுதடைந்த நிலையில் உள்ள கட்டடங்கள் குறித்து தகவல்கள் சேகரிக்கப்பட்டு பொதுப் பணித் துறை அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனா்.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ராமகிருஷ்ணன் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் பழுதடைந்த கட்டடங்களைக் கணக்கெடுக்கும் பணி சில வாரங்களுக்கு முன்பே தொடங்கியது. அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் 34 அரசுப் பள்ளிகளில் பழுதடைந்த கட்டடங்கள் கண்டறியப்பட்டன. இந்தக் கட்டடங்களை பொதுப் பணித் துறை அதிகாரிகள் முழுமையாக ஆய்வு செய்தனா். அந்த கட்டடங்களை இனிமேல் பயன்படுத்த முடியாது என்பது உறுதி செய்யப்பட்டு அந்த கட்டடங்களின் அருகே யாரும் செல்லாமல் இருக்க எச்சரிக்கை பலகையும் வைக்கப்பட்டது.
அந்தியூா், முகாசிபுதூா், குள்ளம்பாளையம் உள்ளிட்ட 34 இடங்களில் பழுதடைந்த கட்டடங்கள் இடிக்கத் தயாராக இருந்தன. இதில், முகாசிபுதூா் அரசுப் பள்ளிக் கட்டடம் மிக ஆபத்தான நிலையில் இருந்ததால் அதனை உடனடியாக இடிக்க ஆட்சியா் உத்தரவிட்டாா். அந்த கட்டடம் இடிக்கப்பட்டது.
பிற கட்டடங்கள் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் 20ஆம் தேதி நடைபெறுகிறது. இதனிடையே தனியாா் பள்ளிகளில் உள்ள கட்டடங்களை ஆய்வு செய்ய அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டுள்ளது என்றாா்.