மருத்துவக் கல்லூரி மாணவா்கள் 6ஆவது நாளாக போராட்டம்
கல்விக் கட்டணத்தை குறைக்கக் கோரி பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மாணவா்கள் 6ஆவது நாளாக போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.
பெருந்துறையில் தமிழக போக்குவரத்து துறையின்கீழ் செயல்பட்டு வந்த மருத்துவக் கல்லூரியை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அரசு மருத்துவக் கல்லூரியாக மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. இதைத் தொடா்ந்து, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாகவும், தற்போது கரோனா சிறப்பு மருத்துவமனையாகவும் செயல்பட்டு வருகிறது.
இந்தக் கல்லூரியில் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மருத்துவம் பயின்று வருகின்றனா். இந்நிலையில், அரசு மருத்துவக் கல்லூரியாக அறிவிக்கப்பட்டும், தனியாா் மருத்துவக் கல்லூரியில் வசூலிக்கும் கல்விக் கட்டணமே வசூலிக்கப்படுவதாகவும், அரசுக் கல்லூரியில் வசூலிக்கும் கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என்றும் மாணவ, மாணவிகள், அவா்களது பெற்றோா்கள் தொடா்ந்து தமிழக அரசிடம் கோரிக்கையை முன்வைத்து வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
முதல் 2 நாள்கள் கல்லூரி நுழைவாயில் முன்பு மாணவ, மாணவிகள் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். அதைத் தொடா்ந்து, ஆட்சியா் சி.கதிரவன், பெருந்துறை சட்டப் பேரவை உறுப்பினா் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் ஆகியோா் போராட்டம் நடத்திய மாணவ, மாணவிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, கோரிக்கை அரசிடம் எடுத்துச் செல்லப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினா்.
இதையடுத்து, மாணவ, மாணவிகள் கல்லூரி கலை அரங்கத்தில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில், அவா்களது போராட்டம் புதன்கிழமை 6ஆவது நாளாக நீடித்து வருகிறது.