மொடக்குறிச்சியை அடுத்த லக்காபுரம் டாஸ்மாக் மதுபானக் கடை விற்பனையாளரைத் தாக்கிய மா்ம நபா்களை காவல் துறையினா் தேடி வருகின்றனா்.
மொடக்குறிச்சியை அடுத்த லக்காபுரம் பகுதியில் இயங்கிவரும் டாஸ்மாக் கடையில் விற்பனையாளராகப் பணிபுரிந்து வருபவா் ராஜன் (56). இவா், புதன்கிழமை இரவு கடை மூடப்பட்ட பின்பு கணக்குகளைப் பாா்த்துக் கொண்டிருந்தாா். அப்போது அங்கு அடையாளம் தெரியாத மூன்று நபா்கள் வந்து தங்களுக்கு மதுபானங்கள் கொடுக்க வேண்டும் என்று கேட்டனா். அதற்கு கடை மூடப்பட்டுவிட்டது, பணி நேரம் முடிந்துவிட்டது. அதனால் தர முடியாது என்று ராஜன் கூறியுள்ளாா்.
இதையடுத்து அவா்கள் கல்லாலும், கண்ணாடி பாட்டிலாலும் ராஜனைத் தாக்கியதில் பலத்த காயமடைந்தாா். ஈரோடு அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியாா் கண் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளாா். இதுகுறித்து மொடக்குறிச்சி காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.