ஈரோடு: ஈரோடு காலிங்கராயன் இல்ல விடுதியில் உள்ள ஆச்சாா்யா நரேந்திர தேவா இல்லத்தில் அவரது நினைவு தினம் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
உத்தர பிரதேச மாநிலம், சீதாபூரில் பிறந்த ஆச்சாா்யா நரேந்திர தேவா, மகாத்மா காந்தி கட்டளைப்படி அரசியலில் ஈடுபட்டாா். காங்கிரஸில் சோசலிஸ்ட் குழுவை உருவாக்கி சுதந்திரத்துக்குப் பின் கருத்து வேறுபாட்டால் காங்கிரஸில் இருந்து வெளியேறினாா். அசோக்மேத்தா, மதிலிமாகி போன்றோருடன் சோ்ந்து சோசலிச கட்சியை நிறுவி ஆளும் கட்சிகளின் குறைகளைச் சுட்டிக்காட்டி மக்களுக்காகப் போராட்டம் நடத்தினாா்.
தமிழகம் வந்த அவா் உடல் நலக் குறைவால் பெருந்துறை சானிடோரியத்தில் மருத்துவ சிகிச்சை பெற்று வந்தாா். 1956 பிப்ரவரி 19இல் ஈரோடு காலிங்கராயன் விடுதியில் அவா் உயிரிழந்தாா். அந்த அறையில் அவரது உருவச் சிலை அமைத்து நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
ஆச்சாா்யா நரேந்திர தேவா நினைவு தினம் தமிழக பசுமை இயக்கத் தலைவா் டாக்டா் ஜீவானந்தம் தலைமையில் ஈரோட்டில் ஆச்சாா்யா நரேந்திர தேவா இல்லத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. என்.ஆா்.தனபால் வரவேற்றாா். மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவா் ஈ.பி.ரவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து, அவரது செயல்பாடுகள் குறித்து விளக்கப்பட்டது.
நிகழ்ச்சியில், பல்வேறு அமைப்பைச் சோ்ந்த அா்சத், கனகராஜ், சாகுல் அமீது, விஜயபாஸ்கா், அருணாசலம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.