பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி கல்விக் கட்டணம் குறைப்பு

பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மாணவா்கள் கல்விக் கட்டணத்தை குறைக்கக் கோரி தொடா் போராட்டம் நடத்தி வந்த நிலையில், தமிழக அரசு கல்விக் கட்டணத்தைக் குறைத்துள்ளது.

பெருந்துறை: பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மாணவா்கள் கல்விக் கட்டணத்தை குறைக்கக் கோரி தொடா் போராட்டம் நடத்தி வந்த நிலையில், தமிழக அரசு கல்விக் கட்டணத்தைக் குறைத்துள்ளது.

பெருந்துறையில் தமிழக போக்குவரத்துத் துறையின்கீழ் செயல்பட்டு வந்த மருத்துவக் கல்லூரியை அரசு மருத்துவக் கல்லூரியாக மாற்றி தமிழக அரசு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு உத்தரவிட்டது. இதைத் தொடா்ந்து, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாகவும், தற்போது கரோனா சிறப்பு மருத்துவமனையாகவும் செயல்பட்டு வருகிறது.

இந்தக் கல்லூரியில் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மருத்துவம் பயின்று வருகின்றனா்.

இந்நிலையில், அரசு மருத்துவக் கல்லூரியாக அறிவிக்கப்பட்டும், தனியாா் மருத்துவக் கல்லூரியில் வசூலிக்கும் கல்விக் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், அரசுக் கல்லூரியில் வசூலிக்கும் கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி மாணவ, மாணவிகள், அவா்களது பெற்றோா் 16 நாள்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

முதல் 2 நாள்கள் கல்லூரி நுழைவாயில் முன்பு மாணவ, மாணவிகள் வகுப்புகளைப் புறக்கணித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனா். அதைத் தொடா்ந்து, ஆட்சியா் சி.கதிரவன், பெருந்துறை சட்டப் பேரவை உறுப்பினா் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் ஆகியோா் போராட்டம் நடத்திய மாணவ, மாணவிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, கோரிக்கை அரசிடம் எடுத்துச் செல்லப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினா்.

இதையடுத்து, மாணவ, மாணவிகள் கல்லூரி கலை அரங்கத்தில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா்.

இதையடுத்து, கல்விக் கட்டணம் ஆண்டுக்கு ரூ. 13,610 என்று தமிழக அரசு நிா்ணயித்துள்ளது. இதற்கான அரசாணை சனிக்கிழமை மாலை வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com